Thursday 19 April 2012

மழை மனிதர்கள்

மழை மனிதர்கள்

'கபடமற்றவன் பாக்கியவான்' ( Innocence is a Bliss) என ஒரு வசனம் உண்டு பைபளில்.. உண்மையில் அப்படிப்பட்ட கபடமற்ற மனிதர்களை பார்ப்பது வெகு அரிது இன்றைய நாட்களில்...அதுவும் சென்னை போன்ற நம்மூரில்

வெகுளி என்பதை கள்ளம் கபடம் அறியாத சூது வாது தெரியாத என்று சொல்லி வருகிறோம்.

"அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது' என்று சிலரை சொல்வதுண்டு... . ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம், கோபம்  என்பதுதான் பொருள். (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 27 பிப் 2011)

இரண்டு வாரம் முன்னால் ஒரு நாள் ஸ்ரீரங்கம் சென்று விட்டு ரங்கநாதரை தரிசித்து விட்டு omni வேன் எடுத்துக்கொண்டு அங்கிருந்து 125 km தூரம் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் எங்கள் சொந்த ஊருக்கு சென்றோம்..இரவு 9 மணிக்கு திரும்பவும் திருச்சியில் இருந்து ட்ரெயின் சென்னைக்கு ...


விடிகாலை ஸ்ரீரங்கத்தில் இறங்கி குளித்து விட்டு காலை 9 .30 மணிக்கெல்லாம் சாமி தரிசனம் முடித்துவிட்டோம்.. லாட்ஜுக்கு திரும்பினால் பவர் கட்...திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி வரை அனைத்து கோயில்களுக்கும் சென்று விட்டோம் இதற்கு முன்னரே....பவர் கட்டை சமாளிக்க சொந்த ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம்...

ஊருக்கு சென்றால் அங்கே சில கபடமற்ற மனிதர்களை சந்திக்க முடிந்தது அங்கே இருந்த ஐந்து  மணி நேரங்களில்...

எங்கள் எதிர் வீட்டில் இருந்த பழைய நண்பன் மாலி என்கிற மகாலிங்கம் என்னை இன்னும் நன்றாக நினைவு வைத்து இருந்தான்...நான் சிறு வயதில் செய்த சுட்டி தனம், விளையாட்டுக்கள் எல்லாம் பற்றி பேசினான்...நான் சிறு வயதில் மூச்சு விடாமல் பாட முயற்சி செய்த கேளடி கண்மணி பாட்டு, பணக்காரன் நூறு வருஷம் பாட்டு  எல்லாவற்றையும் நினைவு கூர்ந்தான்...

எனக்குத்தான் ஒன்றுமே நினைவில் இல்லை...யார் பேரும் நினைவில் இல்லை...என்னை பற்றியும் சென்னையில் என் தொழில் பற்றியும், என் இரண்டாவது மகனின் பெயர் வரை அனைத்து விவரங்களும் விரல் நுனியில் வைத்து இருந்தான்...

எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது... ஏனெனில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் மட்டுமே  என் சிறு வயதில் அந்த கிரமாத்தில் ஒரு முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு நான் சென்று இருந்தேன்... அவ்வளவு தான்...ஆனால் அவர்கள் இன்னும் என்னை நினைவு வைத்து இருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

மொத்தமே பத்து வீடு தான் எங்கள் தெருவில் ... அனைவரும் என்னை விசாரித்தனர்....வடபழனி புது ஆபீஸ் வரை அவர்கள் என்னை பற்றி update  ஆக இருந்தனர்..

எல்லாரும் மற்றவர் வீட்டு சமையல் அறை வரை சுதந்திரமாக வந்து போகிறார்கள்..ஒருவர் வீட்டில் முருங்கக்காய் காயத்தால் எல்லார் வீட்டிலும் அன்று முருங்கக்காய் சாம்பார் தான்...

எங்கள் பக்கத்துக்கு வீட்டிலோ முருங்கைக்காய் கடையில் விற்கும் வேலைக்கு ஈடாக கொடுத்தால் தான் நாங்கள் அதை பார்க்கவே அனுமதி கிடைக்கும்...


பிடி அரிசி திட்டம் என்று கிராமங்களில் ஒன்று உண்டு...அதில் ஒரு வயதான மனிதர் அங்கே உள்ள கிராமங்களில்  வீடு வீடாய் சென்று பிடி அரிசி பெற்று அதை எடுத்து கொண்டு போய் கும்பகோணத்தில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்க்கும்  வேத பாடசாலைக்கும் வாரம் ஒரு முறை கொடுத்து விட்டு வருகிறார் ...

அவருக்கு என்று தனியாக வேலை எதுவும் கிடையாது... நிலபுலன்கள் இருந்தும் அவர் அதை எல்லாம் குத்தகைக்கு கொடுத்து விட்டு ஆத்ம திருப்திக்காக வீடு வீடாக சென்று அரிசி கேட்டு கொண்டுஇருக்கிறார் ....படு வெள்ளந்தியாக இருந்தார் மனிதன்... ஒடிசலான தேகம்...அழுக்கு வேஷ்டி...அழுக்கு சட்டை... ஏகப்பட்ட வசதி இருந்தும் வெகுளித்தனமாய் என் பையனோடு விளையாடிக் கொண்டு இருந்தார்...

கிளம்பும்போது ஒரு 10 kg அளவு உள்ள ஒரு பூசணிக்காயை கொண்டு வந்து கொடுத்தான் மாலி...புளி, பருப்பு , முருங்கைக்காய் என வேறு சில பொருட்களும் ஏற்றப்பட்டது ஒவ்வொரு வீட்டில் இருந்து எங்கள் காரில்...


சொந்தக்காரர்களுக்கும்  அடுத்த வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தும் சென்ற வாரம் முழுவதும் எங்கள் வீட்டில் 'பூசணிக்காய் வாரம்' கொண்டாடினோம்..

கிராமத்தில் நான் பார்த்த யாரிடமும் கள்ளம் கபடம் இருந்தாக எனக்கு தெரிய வில்லை . அவர்களின் பேச்சு வழக்கையே நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்..உலக விஷயங்கள் பலவற்றில் பின்தங்கி இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..கவலைகள் பல இல்லாமல்..

கிளம்பும்போது குனிந்து வராத காரணத்தால் 'டங்' என்று வாசற்காலில் இடித்து கொண்டேன்...எல்லோரும் சத்தம் போட்டு சிரித்து விட்டு "அதுக்கு தான் ஊருக்கு அடிக்கடி வரணும்" என்றனர்...

எனக்கு அந்த வலி மெயின் ரோடு திரும்பும் வரை இருந்தது....ஆனால் அவர்களின் கபடமற்ற பேச்சுக்கள் என்றும் நினைவில் நிற்கும்...





நேற்று தினமலரில் ஒரு செய்தி பார்த்தேன் .. ஒரு பெண் பஸ்ஸில் இருந்து இறங்கியபின் ஒரே கூப்பாடு போட்டாளாம்... கண்டக்டர் விசில் அடித்து வண்டியை அவசரமாக நிறுத்தினாராம்....

பஸ் நின்றவுடன் அவள் "கூட்டமாக இருந்ததனால் டிக்கெட் வாங்க முடியவில்லை... நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது... இறங்கிவிட்டேன் ....ரெண்டு டிக்கெட் கொடுங்க கண்டக்டர்"  என்றாளாம், குழந்தையை கையில் பிடித்த படியே....பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் அவளை பார்த்து சிரித்தார்களாம்....கண்டக்டர் டிக்கெட் கொடுத்து விட்டு அதை போன் போட்டு செய்தி ஆபீசுக்கு சொல்லி இருக்கிறார்..இப்படியும் நடக்கிறது நாட்டில்...எனக்கு அந்த பெண்ணின் நேர்மையை விட அதன் பின்னால் இருக்கும் அவளின் கபடமற்ற செயல் தான் பிடித்து இருந்தது....

சென்னையில் சென்ற வாரம் ஒரு ஹார்ட்வேர் கடையில் ஒரு வெள்ளந்தி மனிதனை பார்த்தேன்...பாத்ரூமில் உள்ள ஒரு குழாய் உடைந்து விட்டதாகவும் கடையில் உள்ள ஒருவரிடம் "சார் இந்த பைப் சரியாக இருக்குமா பாருங்கள் என்றார்" கடைக்காரனோ "உங்க வீட்டுல இருக்கிற பைப் அளவு எனக்கு எப்படி சார் தெரியும்" என்று கடுப்படித்தார்...என்ன வேணும்னு கேளுங்க நான் அதை தரேன் என்றார்...

இல்ல சார் அந்த பைப் கூட இந்த கலர் தான் இருக்கும்.. அதனால தான் உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்" என்றார்...வெள்ளந்தியாக... இன்னும் ஒரு படி மேல போய் "அவர் தன்மனைவிக்கு போன் போட்டு அந்த பைப் எப்படி இருக்கும் என்று போன்ல சொல்ல சொல்லட்டுமா சார்".. என்றார்...கடை பையன் தலையில் அடித்து கொண்டான்..

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை ..கடை பையனிடம்  Plumber போன் நம்பர் கேட்டார்...அவன் போன் நம்பர் எடுப்பதற்குள் "சார் எதுக்கும் இது அதே பைப் தானா என்று என் பொண்டாட்டி கிட்ட கேட்டுட்டு வந்திடறேன் என்று எதையும் எடுக்காமல் திடிரென அங்கே இருந்து ஓடி விட்டார் ......

கடை பையன் திட்டிகொண்டே அந்த பைப்பை உள்ளே கொண்டு போனான்....
கல்லாவில் இருந்த மார்வாடி முதலாளி கடை பையனிடம் . அழகு தமிழில் சொன்னார் ." அந்த ஆளே திட்டாத... இது மாதிரி வெகுளித்தனமா மனுஷங்க இன்னும் இருக்கறதுனால தான் நாட்டுல மழை பெய்யுது" என்றார்..


மார்வாடி சொல்வது உண்மைதான் என்று நினைத்து கொண்டேன்...எனக்கு என்னமோ இவர்கள் போல கபடமற்றவர்கள் தான் 'மழை தருவிக்கும் மனிதர்கள்' என தோன்றியது .

****





2 comments:

  1. கிராமத்தில் இருப்போர் அனைவருமே கள்ளம் கபடம் அற்றவர் என சொல்ல முடியாது. எப்போதோ ஒரு நாள் செல்லும் நம்மை பார்க்கும் விதம் வேறு. அங்கேயே இருப்போரிடம் அவர்கள் பழகும் விதம் வேறு. ஆனால் அன்பை வெளிப்படையாய் காட்டும் மனிதர்கள் அங்கு தான் பார்க்கலாம்

    திண்ணை வைத்த வீட்டை படத்தில் பார்க்க ஆசையாய் உள்ளது அவற்றை நம் ஊர்களில் தான் பார்க்க முடியும்

    ReplyDelete
  2. இவர்கள் போல கபடமற்றவர்கள் தான் 'மழை தருவிக்கும் மனிதர்கள்'

    அருமையான பகிர்வு..

    ReplyDelete